பொருளாதாரம் தொடர்பான உண்மையான புள்ளி விவரங்களை மறைக்கும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க தொடர்ந்து நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி, தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என சிதம்பரம் தரப்பில் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 5 முறை சிதம்பரத்தின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசியல் நிலவரம் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக அவரது தரப்பில் அவரது குடும்பத்தினர் பதிவிடுவதாக கூறி அடிக்கடி பல டுவீட்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள டுவீட்டில், ”கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு தொடர்பான உண்மை விவரம் மூடி மறைக்கப்பட்டது. அதேபோன்று தற்போது நுகர்வோர் செலவினம் பற்றிய விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளது. இதுதான், மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நிலை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.