சென்னை: அஞ்சலக தேர்வுகள், ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே என அறிவிக்கப்பட்டதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய கடித்திற்கு,  பதில் கடிதம் வந்துள்ளது. அதில், தமிழ் மொழியிலும் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜனவரி  4ந்தேதி அன்று தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக தேர்வுகள் மற்றும் ரயில், தபால் சேவை கணக்கர் தேர்வுகளுக்கான அறிவிப்பு  வெளியானது. இந்த தேர்வுகள்  ஆங்கிலம் மட்டும் இந்தியில் மட்டுமே தேர்வுகளை எழுத முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுகள் பிப்ரவரி 14ந்தேதி நடைபெற உள்ளது.

மத்தியஅரசின் இந்த அறிவிப்பு   தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏற்கனவே மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை புகுத்தி வரும் மத்தியஅரசு, தமிழகத்தில் நடைபெறும் அஞ்சலக தேர்வுகளையும் இந்தியில் எழுதச் சொன்னது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.  மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

எம்.பி. வெங்கடேசன் கடிதத்திற்கு, இந்திய அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினர் டாக்டர் சந்தோஷ் குமார் கமிலா பதில் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக தேர்வுகள் மற்றும் ரயில், தபால் சேவை கணக்கர் உள்ளிட்ட வேலைகளுக்கான மையப்படுத்தப்படாத துறை வாரிய தேர்வுகளை இனி தமிழ் மொழியிலும் எழுதலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தை செய்தி குறிப்பாக சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ளார். இது தமிழர் திருநாளுக்கு கிடைத்த பரிசு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.