சென்னை

த்திய அரசு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் கருணாநிதி நினைவு பேனா சின்னத்துக்கு அனுமதி அளித்துள்ளது.

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் அவருக்கு நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. ஒருபுறம் இப்பணிகள் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்குப் பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த நினைவு சின்னம் அமைக்க அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டது.  தற்போது சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் கலைஞர் அமைக்கப்பட உள்ள கருணாநிதி பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் வழங்கிய நிலையில், தற்போது கடலோர ஒழுங்குமுறை ஆணையமும்  அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி 15 நிபந்தனைகளுடன் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற துறைகளின் அனுமதிகளும் ஏற்கனவே கிடைத்திருப்பதால் விரைவில் பணிகளைத் தொடங்க  தமிழக அரசு முடிவு செய்துள்ளது.