சென்னை: சமூக வலைதளங்களினால் மக்களிடையே வதந்திகள் பரவி, தேவையற்ற பிரச்சினை கள் ஏற்படுவதால், சமூக வலைதளங்களுக்கு தணிக்கை செய்ய வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில்,  மத்திய, மாநில அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில், சமூக வலைதளங்களுக் கும் தணிகை வேண்டும் என வலியுறுத்தி  மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில்,  சமீபகாலமாக சமூக வலைதளங்களில் கந்த சஷ்டி கவச விவகாரம், நடிகை வனிதா விஜயகுமார் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசும் பொருளாகவும், சர்ச்சையாகவும் மாறி வருகிறது. இதுபோன்ற சர்ச்சைகளை தடுக்கும் வகையில், யூடியூப், ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் காணொலிகளை தணிக்கை செய்ய தனிவாரியம் ஒன்றை அமைக்க  உத்தரவிட வேண்டும்,

குறும்படம் என்ற பெயரில் ஆபாச காணொலிகள் அதிகம் பதிவிடப்பட்டுவருகின்றது. இந்தியாவில் கோடிக்கணக்கான நுகர்வோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வரும் போதிலும், அதற்கென எந்தவித தணிக்கை முறையும் இல்லை. திரைப்படங்களை தணிக்கை செய்ய தணிக்கை வாரியம் உள்ளதைப் போல சமூக வலைதளங்களை தணிக்கை செய்யவும் தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்.

இதற்கான தணிக்கை செய்ய வாரியம் அமைக்கும் வரை, சமூக வலைதளங்களில் காணொலிகள் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இது முக்கியமான வழக்கு என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக நான்கு வார காலத்திற்குள் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.