டெல்லி: 17 சுற்று குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடல் தகனம் செய்யப்பட்டது. பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்களுக்கு அவர்களின் மகள்கள் கிருத்திகா மற்றும் தாரிணி  இறுதி சடங்குகளை செய்தனர்.

ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த  இந்திய நாட்டின் முப்படை தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல் அவரது டெல்லி வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மதியம் 2மணி அளவில் அவரது  வீட்டிலிருந்து  இறுதி ஊர்வலம் தொடங்கி யது. சாலையோரம் ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர். சிலர் “ஜப் தக் சூரஜ் சாந்த் ரஹேகா, பிபின் ஜி கா நாம் ரஹேகா” என்ற முழக்கங்களை எழுப்பினர். அப்போது வந்தே மாதரம் என முழக்கமிட்டு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாஆகியோரது இறுதி ஊர்வலம்,  காமராஜ் மார்க் வழியாக டெல்லி கன்டோன்மென்ட் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இசைக்கருவிகளுடன் வீரர்கள் அணிவகுத்து நின்றனர். பின்னர் ராவத்தின் மகள்கள் மற்றும் குடும்பத்தினர் பிபின் ராவத் மற்றும் மதுலிகாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

பின்னர் உடல்கள் தகன மேடைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.  பிபின் ராவத்தின் உடல்மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி அவரது மகள்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிபின் ராவத் மற்றும் அவரது மனைவின் உடல்கள் ஒரே தகன மேடையில் வைக்கப்பட்டது. உடலுக்கு அவரது மகள்கள் இறுதிச்சடங்கு செய்தனர்.  அதன்பின்னர் 17 சுற்று குண்டுகள் முழங்க 800  ராணுவ வீரர்களின் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.