டெல்லி: இந்தியாவின் கொரோனா சான்றிதழுக்கு 108 நாடுகள் அனுமதி வழங்கி உள்ளதாக மத்தியஅரசு கூறியுள்ளது.

உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.  இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி பொதுமக்களுக்கு இலவசமாக போடப்பட்டு வருகின்றனர். இந்த தடுப்பூசிகளை உலகின் பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ள 8 தடுப்பூசிகளில் இந்தியாவின் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளும் அடங்கும்.

தற்போதுவரை இந்தியாவில், இதுவரை 131 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளனன.  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதால் தொற்று பரவலும் கட்டுக்குள் வந்துள்ளன. தற்போது உலக நாடுகளிடையே மீண்டும் விமான போக்குவரத்து, வர்த்ததகம் உள்பட பல்வேறு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனால்,  தடுப்பூசிகள் முழுமையாக செலுத்தப்பட்ட நபர்களே மற்ற நாடுகளுக்கு பயணிக்க அந்தந்த நாடுகள் அனுமதி வழங்கி உள்ளன.

இதுகுறித்து மத்தியஅரசு வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ரஷ்யா, பிரேசில், குவைத், ஈரான், கத்தார் உள்பட 108 நாடுகள் சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும்,  சான்றிதழை ஏற்பது தொடர்பாக மேலும் பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.