சேலம்:
சேலம் அருகே இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டது.

சேலம் மாவட்டம், எடப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்து 40ற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சங்ககிரியை நோக்கிச் சென்றது. அப்போது கோழிப்பண்ணை அருகே எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து திடீரென பயணிகள் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளும் புளிய மரத்தில் சாய்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் பயணம் செய்த கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பயணிகள் படுகாயம் அடைந்து அலறினர்.

தகவலறிந்து காவல் துறையினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்த கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் தனியார் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரையும் மீட்டு எடப்பாடி, சங்ககிரி மற்றும் சேலம், உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், எடப்பாடி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கல்லூரி மாணவ, மாணவிகளை சங்ககிரி கோட்டாட்சியர் வேடியப்பன் நேரில் பார்வையிட்டு பாதிப்பு குறித்து மருத்துவர்களை கேட்டறிந்தார்.

இந்த விபத்து குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பேருந்தும், கல்லூரி பேருந்தும், நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான விபத்தில் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.