பெண்கள் விடுதலை குறித்து கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்வியை நீக்குவதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற ஆங்கிலத் தேர்வுக்கான வினாத்தாளில், பெண்கள் தங்கள் கணவருக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற பொருளில் கேள்வி இடம்பெற்றது.

மேலும், மற்றொரு கேள்வியில்,  கணவனின் பேச்சை கேட்டால் தான் குழந்தைகளின் கீழ்படிதலை தாயால் பெற முடியும் என்றும்,  குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்தை பெண் விடுதலை அழித்துவிடுகிறது என்பது போன்ற கருத்துகள் இடம்பெற்றிருந்தது.

பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ள இந்த பத்தி வினா கேள்விகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

இதுகுறித்து மக்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிபிஎஸ்இ தேர்வில் பெண்கள் மீதான வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கேள்வி இடம் பெற்றதற்கு “மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். மேலும் இந்த கேள்விகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய இந்த கேள்விகளை கேள்வித்தாளில் இருந்து நீக்குவதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளதோடு, அந்த கேள்விக்கு அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பின் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.