சென்னை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரி பேராசிரியை மாணவிகளை தவறாக வழிநடத்தும் ஆடியோ நேற்று வெளியானது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘கல்லூரி மாணவிகளை ஒரு பேராசிரியையே தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயற்சித்திருப்பது அதிர்ச்சியளிப்பதோடு கடும் கண்டனத்திற்குரியது. அவரை உடனடியாக கைது செய்து, எந்த “மேலிடத்திற்கு” இப்படிப்பட்ட ஈனச் செயலில் ஈடுபட முயன்றார் என்பதை விசாரித்து அக்குற்றாவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும்.

கல்வியை போதிக்க வேண்டிய பேராசிரியர் ஒருவரே கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை நாசமாக்க முயன்ற இந்தப் பிரச்சினையில், வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.