டெல்லி: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 3வது முறையாக மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இது மாநிலங் களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையே காவிரி பங்கீடு குறித்து விவாதித்து முடிவு எடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்படி இந்த ஆணைய கூட்டத்தில், காவிரியில் தண்ணீர் இருப்பு, தமிழ்நாட்டுக்கு திறந்து விடும் அளவு குறித்து விவாதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கர்நாடக அரசு மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு தமிழகஅரசு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால், காவிரி ஆணைய தலைவர், மேகதாது அணை குறித்து விவாதிப்போம் என்று கூறி வருகிறார்.

இந்த நிலையில், ஏற்கனவே 2 முறை அறிவிக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது 3வது முறையாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நாளை (6ந்தேதி) நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்,  தவிர்க்க முடியாத காரணத்தால்  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் அறிவித்துள்ளது.