சென்னை: காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் 11ந்தேதி நடைபெற உள்ள நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்துவிட மாட்டோம் என முரண்டு பிடித்த கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு கடந்த சில நாட்களாக தண்ணீரை திறந்து விடுகிறது. தற்போது, அங்கு மழையும் பெய்து வருவதால், காவிரியில் கூடுதல் தண்ணீரை திறந்து விடுகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்புபடி  காவிரி நீர் பங்கீட்டை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையமை, காவிரி ஒழுங்காற்று கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை காவிரி மேலாண்மை ஆணையம் கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை திறந்துவிடாமல் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு முரண்டு பிடித்து வந்தது. தமிழ்நாட்டில், கடந்த ஜூன், ஜூலை  ஆகிய 2 மாதங்களில் மட்டும்  தரவேண்டிய  மொத்த தண்ணீரில் 30 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம், தமிழகத்திற்கு தரவில்லை. அதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு  உள்ளது.

இது குறித்து தமிழக  நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன் 2 முறை  மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் மனு அளித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சியின் மாநிலமான கர்நாடக மாநில முதலமைச்சரிடம் பேசாமல், எப்போதும்போல பிரதமர் மோடிக்கு இது குறித்து கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் வரும் 11ம் தேதி டில்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்  அதன் தலைவர் ஹல்தார் தலைமையில் நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. . இந்த கூட்டத்தில் முக்கியமாக காவிரி நீர் நிலுவை குறித்து தமிழகம் பிரச்னை எழுப்பும் என்பதால் கர்நாடகம்  காவிரியில் தண்ணீரை திறந்து விட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கே. ஆர்.எஸ்,  மற்றும் கபினி அணைகளில் இருந்து ஆகஸ்டு 6ந்தேதி முதல்   தண்ணீர் திறந்து விட்டு உள்ளது. இன்று காலை நிலவரப்படி தமிழகத்திற்கு வினாடிக்கு 10,340 கனஅடி திறந்து உள்ளது.  இந்த தண்ணீரின் அளவு மேலும் அதிகாரிக்கும் என்றும், கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், வினாடிக்கு 20,000 கன அடி தண்ணீர் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறத. இதற்கிடையில்,  காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்  வரும்  11ம் தேதி  நடைபெற உள்ளதால், அதுவரை கண்துடைப்பு நாடகமாக, கர்நாடக அரச    தண்ணீர் திறக்கும்  என அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 113.46 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 35.34 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,027 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,115 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 64.07 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 18.91 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 4,366 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 5,750 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.