சென்னை:
காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“காவிரி நடுவர் மன்றம் பிப்ரவரி 5, 2007 இல் இறுதித் தீர்ப்பை வழங்கியுடன், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. உச்சநீதிமன்றம், நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்புடைய இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தவையா என்பது குறித்து முதலில் முடிவெடுப்பதாகக் கூறியது.

மேலும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டது.
மத்திய அரசு சார்பில் அக்டோபர் 27, 2016 இல் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “காவிரி நதி நீர்ப் பங்கீடு குறித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அல்லாத அதற்கென தனி அமைப்பு விசாரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதன் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி நியமிக்கப்படுகிறார்.
எனவே, நடுவர் மன்றம் அளிக்கும் தீர்ப்பையே இறுதியானதாகக் கருத வேண்டும். அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாநிலங்கள் மேல்முறையீடு செய்ய அரசியலமைப்பு விதிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
உச்சநீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்ட காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யும் மனுக்களை மீண்டும் உச்சநீதிமன்றத்திமே விசாரிக்க அரசியலமைப்புச் சட்ட விதிகளில் இடம் இல்லை. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 262(2) ன் படி, நதிநீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை அளித்த பிறகு அதில் உச்சநீதிமன்றமோ, வேறு நீதிமன்றமோ தலையிட முடியாது; நாடாளுமன்றம் மட்டுமே தலையிட முடியும். எனவே இது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அபிதவராய், ஏ.என்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தமிழகத்தின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, “காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மாநில அரசுகளுக்கு முழு உரிமை உள்ளது. 1956 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பங்கீட்டுச் சட்டப் பிரிவு 6 (2)ன் கீழ் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்” என்று எடுத்துரைத்தார்.
உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளா மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் அரசியல் சாசன அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு உண்டு என்று  டிசம்பர் 9 ஆம் தேதி வரவேற்கத்தக்க தீர்ப்பளித்துள்ளது.
மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், மாநில அரசுகள் தொடுத்த மேல்முறையீட்டு மனுக்களை அரசியல் சாசனம் 136 ஆவது பிரிவின்படி உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என்று  அறிவித்ததோடு, கர்நாடக மாநில அரசு, வினாடிக்கு இரண்டாயிரம் கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.
காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலையுடன் நடந்துகொள்வதுடன், இதற்கு முன்னர் உச்சநீதிமன்றம் அறிவித்தபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி பாசனப் பகுதியில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகிவிட்டதால் நடப்பு ஆண்டில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி முற்றாக அழிந்துவிட்டது. பருவமழை பொய்த்து, நீரின்றி பயிர்கள் காய்ந்து போனதால் 12 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட துயரம் நிகழ்ந்தது.
இந்நிலையில் தமிழகத்தின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். உச்சநீதிமன்றம் முதலில் பிறப்பித்த உத்தரவை ஏற்று, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்திடும் வகையில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க தேவையான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்” இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.