டில்லி:

காவிரியில் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உடனே உத்தரவிட வேண்டும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவிரி தொடர்பான வழக்கு நாளை உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இன்று கர்நாடகம் சார்பில், தமிழக்ததில் திறந்துவிட கர்நாடகாவில் தண்ணீர் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவில், 4 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட உச்சநீதி மன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளது.

கர்நாடக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில்,   போதிய மழை இல்லாததால் தமிழகத்திற்கு காவிரி யில் தண்ணீர் திறக்க இயலாத  நிலையில் இருப்பதாகவும்,  இந்த ஆண்டு ஏப்ரல் இறுதி வரை தமிழகத்திற்கு 116.7 டிஎம்சி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது,  காவிரியில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டதைவிட கூடுதலாக 16.66 டி.எம்.சி தண்ணீர் திறந்து விடபட்டு உள்ளது , தற்போதைய நிலையில், கர்நாடக மாநிலத்தின் தேவைக்கு மட்டுமே காவிரியில் தண்ணீர் இருக்கிறது ஆகவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட 4 டிஎம்சி தண்ணீரை திறக்க இயலாது என்று கூறி உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், காவிரியில் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உடனே உத்தரவிட வேண்டும் என்றும்,  அணையில் தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசு கூறுவதை ஏற்க கூடாது, கர்நாடக அணையில் 19 டி.எம்.சி தண்ணீர் உள்ளது என்றும், அதில் கர்நாடகா 4 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக  தமிழகத்துக்கு தர உச்சநீதி மன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளது. மேலும்,  ஏற்கனவே நீர் தந்துவிட்டதாக கர்நாடக அரசு கூறுவது உண்மை இல்லை எனவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இதுதொடர்பான விசாரணை நாளை நடைபெற உள்ளது.