சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.  அதன்படி, நல்லகண்ணு, வைகோ,கே.பாலகிருஷ்ணன், டிடிவி.தினகரன், பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்ட 13 பேர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது,

“தூத்துக்குடியில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி, நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக, பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, தமிழ்நாடு முதல்வரிடம் 14-5-2021 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை அரசு கவனமாகப் பரிசீலித்தது. ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 21-5-2021 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளைத் தவிர 38 வழக்குகளைத் திரும்பப் பெற்றிடவும், அதில் தொடர்புடைய அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற்றிட உத்தரவிட்டார்.

அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக மாநில துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், தற்போதைய மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அழகு முத்துபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜா, அமமுக மாவட்டச் செயலாளர் ஹென்றி தாமஸ், இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பூமயில், ஆம் ஆத்மி கட்சியின் துணைச் செயலாளர் ஆர்டர் மச்சோடா, திமுக ஒன்றியச் செயலாளர் பாலசிங் ஆகியோர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.