துரை

மிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துச் சீட்டு வழங்கக் கோரி ஒரு வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் பதியப்பட்டுள்ளது.

மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சிந்துஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில்: ”பிறந்து 45 நாளான எனது குழந்தைக்குத் தடுப்பூசி போடுவதற்காகக் காரைக்குடி நகராட்சி அங்கன்வாடி மையத்துக்குச் சென்றேன். குழந்தைக்குச் செவிலியர் தடுப்பூசி போட்டு, டானிக் ஒன்றைக் கொடுத்து அதை 6 மணி நேரத்துக்கு ஒருமுறை 3 எம்எல் அளவு வீதம் குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்றார்.  ஆனால் குழந்தைக்கு உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதைச் சம்பந்தப்பட்ட செவிலியரிடம் கேட்டபோது அலட்சியமாகப் பதிலளித்தார்.

எனவே தனியார் மருத்துவமனைக்குக் குழந்தையை அழைத்துச் சென்றேன். அங்கு ஏற்கனவே குழந்தைக்கு பாரசிட்டமால் டானிக்கை அளவுக்கு அதிகமாக வழங்கியதால் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது என மருத்துவர் தெரிவித்தார். என் குழந்தைக்கு அரசு மருத்துவர், செவிலியரின் அலட்சியம் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டது. எனவே மருத்துவர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரை குறித்த மருத்துவ சீட்டுத் தனியே வழங்கப்படுவதில்லை. எனவே எப்படி மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டும் எனத் தெரியாமல் பலரின் உடல் நிலை பாதிப்படைகிறது. எனக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும், அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு வருவோருக்கு மருந்து, மாத்திரை குறித்து சீட்டு வழங்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வில் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் மனுதாரரின் புகார் குறித்து விசாரணை நடைபெறுகிறது எனத் தெரிவித்துள்ளார்.. நீதிபதிகள் இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.