சென்னை: தமிழகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்க தொடரப்பட்டு உள்ளது. ஏற்கனவே மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க கோரி  திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர்  தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு 2021 -22ம் ஆண்டு வெளியிட்ட வேளாண் துறை கொள்கையில், விவசாயத்துக்கு இயந்திரங்களை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு கூடுதல் சுமையாக உள்ளது. தற்போது டீசல் விலை லிட்டருக்கு நூறு ரூபாய் அளவில் உள்ளதாகவும், ஏற்கனவே உற்பத்திச் செலவு அதிகரிப்பு, குறைந்த விலைக்கு விளைபொருட்கள் கொள்முதல் ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு எரிபொருள் விலை உயர்வு கூடுதல் சுமையாக உள்ளது.

பீகார்  மாநிலத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் ஒரு லிட்டர் டீசல் 50 ரூபாய்க்கு வழங்கப்படுவதாகவும், கர்நாடகா மாநிலத்தில் மானியம் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி உள்ளதுடன்,  தமிழகத்தில் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதைப் போல, விவசாயிகளுக்கும் மானிய விலையில், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் வழங்க  உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.