கோபிசெட்டிபாளையம்

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திருப்பூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்த்ல் பிரசாரம் 17 ஆம்  தேதி மாலையுடன் முடிவடைகிறது. அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் விதமாகத் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் அப்பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் காரிலும் தீவிரச் சோதனை நடத்தப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் காரில் வந்துகொண்டிருந்தார். பறக்கும் படை கண்காணிப்பு நிலைக்குழுவினர் அவரது காரை ஓரமாக நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர் .

இதனால் கோபமடைந்த ஏ.பி.முருகானந்தம் வாழ்நாள் முழுக்க நீதிமன்றத்துக்கு அலைய வைத்துவிடுவேன் என்று சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது., அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திருப்பூர் பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது குன்னத்தூர் காவல் நிலையத்தில் பறக்கும் படை அதிகாரிகள் புகார் அளித்தனர்.

அவர் மீது தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வாக்குவாதம் செய்ததாகப் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து திருப்பூர் பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது குன்னத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.