சென்னை:
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டுள்ள சலூன் கடை நடத்துபவர்கள், முடிவெட்டும் தொழிலாளர்களுக்கு  தலா 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரகப் பகுதிகளில் மட்டுமே சலூன் கடைகள் திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது.
இந்த நிலையில்,  தமிழகம் முழுவதும் ச லூன் கடைகளை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு முடிதிருத்துவோர் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் முனுசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவில்,  ஊரடங்கிற்கு முன்னதாக மாதம், 15,000 ரூபாய் வரை வருவாய் ஈட்டி வந்த சுமார் 10 லட்சம் முடித்திருத்தும்  தொழிலாளர்கள் கடந்த 2 மாதங்களாக எந்த வித வருவாய் இல்லாமல் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு முடித்திருத்தும் தொழிலாளருக்கும், தலா 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
முடிதிருத்தும்  தொழிலாளர்களின் குடும்பங்கள் பட்டினி சாவினால் பாதிக்கப்படும் முன் அனைத்து சலூன் கடைகளையும் நிபந்தனையுடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என தெரிவித்திருந்தார்.
 இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற  நீதிபதி ரவிசந்திர பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தற்போது கிராம பகுதிகளை திறக்க உத்தரவிடப் பட்டுள்ளதாகவும், படிப்படியாக சலூன் கடைகளை திறப்பது தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து, மனு குறித்து ஒரு வாரத்திற்குள்  பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மே 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.