விழுப்புரம்

தமிழக அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி ஊழல் வழக்கு வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

கடந்த 2012 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடந்து வருகிறது.  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 26 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 22 பேர் அரசு தரப்புக்கு பாதகமாகப் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். மற்ற சாட்சிகளின் விசாரணைக்காக இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாத், கோதகுமார் ஆகிய 4 பேர் நேரில் ஆஜராகினர். ஆனால் அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன் ஆகிய 3 பேரும் ஆஜராஜான்மல் அதற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்தனர். எனவே இவ்வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) ஹெர்மிஸ், இவ்வழக்கின் விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.