சென்னை: 3200 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது கி.மு.க ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றவர்களாக  சங்க காலத் தமிழர்கள் திகழ்ந்துள்ளனர் என்பதற்கான கரிமப் பகுப்பாய்வு (கார்பன் டேட்டிங்) சான்றிதழ் கிடைத்துள்ளதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று பேரவை 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் கீழடி அகழ்வாய்ப்பு குறித்து பல சிறப்புமிகு தகவல்கள் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது,

‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற தமிழினத் தலைவர் கலைஞர் போற்றிய செம்மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையையும், உலகத்துக்கு நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றுக் கொடுக்க பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வலம் வந்த தமிழினத்தின் சிறப்பை பறை சாற்றும் அறிவிப்பு ஒன்றை விதி எண் 110 இன் கீழ் இந்த மாமன்றத்தில் வெளியிடுவதை பெருமையாகக் கருதுகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதெல்லாம் ஆட்சியில் அமர்கிறதோ அப்ப்போதெல்லாம் அது தமிழின் ஆட்சியாக, தமிழினத்தின் ஆட்சியாகத்தான் இருந்துள்ளது. மகாசக்ரவர்த்திகள் எல்லாம் இந்தியாவைத் தன் குடையின் கீழ் கொண்டு வந்து ஆண்டபோதும் தனிக்குடையின் கீழ் ஆளுகை செலுத்திய மண் இந்த தமிழ் மண்.

இவை எல்லாம் ஏதோ சில இலக்கிய ஆதாரங்களை வைத்து மட்டும் சொல்லவில்லை. அசைக்க முடியாத தொல்லியல் ஆதாரங்கள் இருக்கிறது. இவை அனைத்தும் யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத ஆதாரங்கள் ஆகும். முதல்வர் கலைஞர் அவர்கள் தனது ஆட்சிகாலத்தில் தொல்லியல் ஆழ்கடல் கள ஆய்வை விரிவாக மேற்கொள்ள பெருமுயற்சி எடுத்தார்.

கடந்த 1990 ஆம் ஆண்டு கடல்சார் ஆய்வுக்குப் பெருந்திட்டம் தீட்டியதும், பின்னர் கடலில் மூழ்கிய பூம்புகார் நகரத்தினைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஆழ்கடல் அகழாய்வில் சில கட்டுமானப் பகுதிகள் கண்டறியப்பட்டதும் முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமுயற்சியால்தான் என்பதை அனைவரும் அறிவார்கள்.

அந்த வரிசையில், சிவகங்கை மாவட்டம், கீழடியில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி உலக அரங்கில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை அள்ளிக்கொடுக்கும் கீழடியில் நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சியை ஒன்றிய அரசு பாதியிலேயே கைவிட்டபோது, முத்தமிழறிஞர் கலைஞர் அதற்கு எதிராக தன் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார்.

நானும் கடந்த 2019 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, கீழடிக்கு நேரடியாகச் சென்று, அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட்டேன். வியக்கவைக்கும் செங்கல் கட்டுமானங்கள், கருப்பு மற்றும் சிவப்பு வண்ணம் தாங்கிய பானை ஓடுகள், அரிய கல்மணிகள், தங்க அணிகலன்கள், சிந்துவெளி நாகரிக காலத்தில் காணப்பட்ட அதே திமில் கொண்ட காளையின் எலும்புகள், விளையாட்டுப் பொருட்கள், தொழிற்பகுதிகள் என ஒரு செழுமைமிக்க சமூகமாக சங்காலத் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நாம் மட்டுமல்ல, உலகமே அறிந்து கொண்டது.

அதுமட்டுமல்ல, கரிமப் பகுப்பாய்வு (Carbon Dating) முடிவுகளின்படி, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சமூகமாக சங்க காலத் தமிழர்கள் விளங்கினர் என்பதை இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள். அந்த வகையில், ‘கீழடி’ என்ற ஒற்றைச் சொல் உலகத் தமிழர்களை ஒன்றிணைத்தது என்றே சொல்லவேண்டும். அதே உணர்வைத் தாங்கி தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில்தற்போது அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

கீழடியில் சூரியன், நிலவு மற்றும் வடிவியல் குறியீடுகள்கொண்ட முத்திரைகளுடன் கூடிய வெள்ளிக்காசு ஒன்றுகண்டெடுக்கப்பட்டது. அதை ஆய்வு செய்த தலைசிறந்த நாணயவியல் நிபுணரும், கொல்கத்தா பல்கலைக் கழகப் பேராசிரியருமான சுஷ்மிதா பாசு மசும்தார் – இந்த வெள்ளி முத்திரைக் காசு, கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முன்னரே, அதாவது மௌரியப் பேரரசர் அசோகர் காலத்திற்கும் முற்பட்டது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

இவற்றுக்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில், ஒருமுக்கிய ஆய்வு முடிவை இங்கு வெளியிட விரும்புகிறேன். தமிழ்நாடு தொல்லியல் துறையால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வின் போது ஆதிச்சநல்லூருக்கு அருகே, சிவகளைப் பறம்புப் பகுதியில் வெளிப்பட்ட முதுமக்கள்தாழி ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகள் அமெரிக்கநாட்டின் மியாமி நகரத்தில் அமைந்திருக்கும் உலகப்புகழ் பெற்றBeta Analytical Laboratory பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அதன் ஆய்வு முடிவுகள் சமீபத்தில் கிடைத்துள்ளன.

AMS Carbon Dating முறையில் ஆய்வு செய்ததில், முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு. ஆயிரத்து நூற்று ஐம்பத்தைந்துஎனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ‘தண்பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்ய முடிகிறது என்பதைத் தமிழ் கூறும் நல் உலகம் அறியும் வகையில், இந்த ஆய்வுமுடிவுகளை அறிவிப்பதில் அள விட முடியாத பெருமிதமும், மனமகிழ்ச்சியும் கொள்கிறேன்.

பண்டைய தமிழர்களின் செழுமையான பண்பாடு, கடல்வழி வணிகம், நீர் மேலாண்மை, இரும்பு உருக்குதல், அரியமணிகள் தயாரித்தல், முத்து குளித்தல் போன்ற தொழில்நுட்பங்களை உலகம் அறிந்துகொள்ளத் தேவையான சான்றுகளைச் சேகரிக்கும் வகையில், இந்தியாவில் வேறெந்த மாநிலத்தை விடவும் அதிக அளவு நிதியாக ஐந்து கோடி ரூபாய் இந்த நிதியாண்டில் அகழ்வாராய்ச்சிப் பணிக்காகவும், ஆழ்கடல் அகழாய்வுக்காகவும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பதை, மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.

அதன் தொடர்ச்சியாக, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் போது கிடைத்த அரிய பொருட்களை அழகுற காட்சிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலி நகரில் நவீன வசதிகளுடன் அருங்காட்சியகம் அமைக்கப்படும். இது “பொருநை ’’ அருங்காட்சியகம் என அமைக்கப்படும்.

இதுமட்டுமல்ல, தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்திய நாடெங்கும், அதேபோல் கடல்கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித்தடம் பதித்த வெளிநாடுகளிலும் தமிழ்நாடு தொல்லியல் துறை உரிய அனுமதிகள் பெற்று இனி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என்பதை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

முதற்கட்டமாக, சங்ககால துறைமுகமான முசிறி தற்போதுபட்டணம் என்ற பெயரில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. சேரநாட்டின் தொன்மையினையும், பண்பாட்டினையும் அறிந்து கொள்ளும் வகையில், கேரள மாநிலத் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வுப்பணி மேற்கொள்ளப்படும்.

அதேபோல், ஆந்திர மாநிலத்திலுள்ள வேங்கி, கர்நாடக மாநிலத்தின் தலைக்காடு மற்றும் ஒடிசா மாநிலத்திலுள்ள பாலூர் ஆகிய வரலாற்றுச் சிறப்புடைய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அன்றைய ரோமப் பேரரசின் ஒருபகுதியாக விளங்கிய எகிப்து நாட்டிலுள்ள குசிர்-அல்-காதிம் மற்றும் பெர்னிகா, மேலும் ஓமன் நாட்டின் கோர் ரோரி ஆகிய இடங்களில் பழந்தமிழகத்தோடு இருந்த வணிகத் தொடர்பை உறுதி செய்யும் வகையில், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அந்தப் பகுதிகளில், அந்தந்த நாட்டின் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

மாமன்னன் இராசேந்திர சோழன் வெற்றித் தடம் பதித்த தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் அந்தந்த நாட்டு தொல்லியல் வல்லுநர்கள்துணையோடு, உரிய அனுமதி பெற்று ஆய்வுகள்மேற்கொள்ளப்படும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என உலகிற்கு அறிவித்த தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி, இனிஉலகெங்கும் பயணம் செய்வோம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதைச் சான்றுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக நிறுவுவதே நமது அரசின் தலையாயக் கடமை என்பதை இம்மாமன்றத்தின் மூலம் உலகிற்கு அறிவிப்பதில் நான் பெருமையாகக் கருதுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.