சென்னை: பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடுக்கு அனுமதியில்லை என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம்,  மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 % இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது என்று  தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பொது பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்தியஅரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த நடைமுறை நடப்பாண்டிலேயே அமல்படுத்த மாநிலஅரசுகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

ஏற்கனவே இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில்,  மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், மத்தியஅரசு, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாமல் இருந்து வந்தது. இதையடுத்து, திமுக தரப்பில், மத்தியஅரசு மீது  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கட்ந்த விசாரணையின்போது, மனுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க 2 வார காலம் அவகாசம் வழக்கியது. இதனையடுத்து,பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான ஒதுக்கீட்டால் ஓபிசி பிரிவுக்கு பாதிப்பில்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதற்கிடையில்,அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில்,இதர பிறப்டுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவினருக்கு நடப்பு ஆண்டிலேயே இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி,மாநில அரசுகள் நடத்தி வரும்  மருத்துவ கல்லூரிகளில் ஆல் இந்தியா கோட்டா என்ற பிரிவில் ஓபிசிக்கு 27 % ,பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக கடந்த மாதம் மத்திய அரசு தெரிவித்தது.

இதுகுறித்து விசாரணையின்போது, திமுக  மூத்த வழக்கறிஞர் வில்சன் நீதிபதிகளிடம் எடுத்துரைத்தார். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசிக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும், இந்த இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங் களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், தமிழக கல்லூரிகளுக்கு பொருந்தாது எனவும் வாதிட்டார்.

தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மத்திய அரசு இட ஒதுக்கீடு அமல்படுத்த முடியாது எனவும், 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று (ஆகஸ்டு 25ந்தேதி) தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி-க்கு 27 சதவீத இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அதேசமயம், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது என்றும், பொருளாதார ரீதியில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்ற ஒப்புதல் பெற வேண்டும் என்று உத்தரவிட்டு, திமுக தொடர்ந்த அவமதிப்பு  வழக்கை முடித்து வைத்தது.