சென்னை: சசிகலா மீதான வருமானவரித்துறை வழக்கில், சிறை தண்டனை பெற்றவருக்கு வரி விலக்கு தொடர்பான சுற்றறிக்கை பொருந்தாது என வருமான வரித்துறை நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சசிகலா சொத்து சேர்த்தது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை, 2008ஆம் ஆண்டு வருமான வரித்துறைக்கு பட்டியல் அனுப்பி வைத்தது. அதன் அடிப்படையில் 1994 – 1995ம் நிதியாண்டில் 20க்கும் மேற்பட்ட சொத்துகள் தொடர்பான வருமானத்திற்கான வரியாக 48 லட்சம் ரூபாயை செலுத்த சசிகலாவுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டது.

வருமான வரித்துறையினரின் உத்தரவை எதிர்த்து, சசிகலா தரப்பில் வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டிருந்தார். அதில், சசிகலாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.  அதை எதிர்த்து,   வருமான வரித்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், மத்தியஅரசின் நேரடி வரிகள் வாரியம் பிறப்பித்த சுற்றறிக்கையில், ஒரு கோடி ரூபாய் அல்லது அதற்கு கீழ் உள்ள வருமான வரி பாக்கி அல்லது அபராதம் தொடர்பான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், தனக்கு எதிரான வழக்கையும் திரும்பப் பெற வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானம், சத்திக்குமார் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கின் விசாரணையின் போது,   வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சசிகலா ஏற்கனவே குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளனர். எனவே அபராதத்தை கைவிடும் சுற்றறிக்கை, சசிகலாவுக்கு பொருந்தாது என்றும் தெரிவித்தார்.

ஆனால், அதை ஏற்க மறுத்த தரப்பு சசிகலா தரப்பு வழக்கறிஞர், மத்தியஅரசின் சுற்றறிக்கை சசிகலாவுக்கும் பொருத்தும் என்று வாதிட்டார். இதையடுத்து,   சசிகலா தரப்பு விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்..