சென்னை: தேர்தல் விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்ட யாருக்கும் அனுமதியில்லை என்று காட்டமாக கூறிய சென்னை உயர் நீதிமன்றம் , விதிகளை மீறி ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்ற வேண்டும் என்றும், அதற்கான செலவுத்தொகையை  சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சென்னை உள்பட பல பகுதிகளில் போஸ்டர் ஒட்ட தடை உள்ள நிலையில், தடையை மீறி கட்சியினர் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி 117-வது வார்டில் தேர்தலில் பிரச்சாரத்துக்காக ஒட்டப்பட்ட தனது போஸ்டர் மீது திமுக வேட்பாளர் போஸ்டர் ஒட்டியுள்ளதாக கூறி, திமுக வேட்பாளர் ஆறுமுகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது, மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  சென்னையில், அனுமதியின்றி போஸ்டர் ஒட்ட தடை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இ

இதையடுத்து  அனுமதியின்றி போஸ்டர் ஒட்ட யாரையும் அனுமதிக்க கூடாது என சென்னை மாநகராட்சிக்கும், காவல் ஆணையருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள்,  அதையும் மீறி போஸ்டர் ஒட்டியவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், ஏற்கெனவே ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றி, அதற்கான செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் வசூலிக்கவும் உத்தரவிட்டனர்.

தேர்தலின் பெயரால் நகரை குப்பைக்காடாக்க கூடாது என  காட்டமாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த உத்தரவை மீறுவோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் வேட்பாளர்கள் அரசு கட்டிட சுவர்கள், தனியார் சுவர்களில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டக் கூடாது என விளம்பரம் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்ததுடன்,  இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து பிப்ரவரி 21-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநகராட்சி, மாநில தேர்தல் ஆணையம், காவல் ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.