சென்னை: தமிழ்நாடு அரசு மின்கட்டணத்தை உயத்தப்போவதாக அறிவித்துள்ளது, மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையிலான புதிய மின்சார திருத்தச் மசோதாவை மத்தியஅரசு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தாக்கல் செய்தார். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மின்சார சட்டத்திற்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. குறைந்தபட்சம் அதிகபட்ச மின்கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாகவும் சட்டத்தில் திருத்தும் கொண்டுவரப்படுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கிய நாளில் இருந்து   எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் முறையாக நடைபெறாமல் முடங்கியது. இடையில்சனி,  ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடுகிறது.   இந்த நிலையில் இன்று  நாடாளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  இந்த மசோதாவை மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தாக்கல் செய்ய உள்ளார்.

ஏற்கனவே கடந்த 2003ம் ஆண்டு மின்சார திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் மேலும்  பல்வேறு திருத்தங்களை செய்து  புதிய மின்சார திருத்தச் சட்ட மசோதாக கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் வரைவு மசோதா கடந்த 2021ம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம்தேதி  வெளியிடப்பட்டது .அப்போது, வரைவு மசோதா தொடர்பாக  21 நாட்களுக்குள் இஆலோசனைகள், கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என மத்திய அரசு கூறியதுடன், இந்த மசோதா நாட்டின்  வளர்ச்சிக்காக என தெரிவித்தது.

இந்த நிலையில், இன்று புதிய மின்சார திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இலவச மின்சார சலுகைகள் ரத்து செய்யப்படுவதுடன், மின் விநியோகத்தை  தனியாருக்கு விடுவது,  மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குதல்,  குறைந்தபட்சம் மற்றும்   அதிகபட்சம் மின்கட்டணத்தை நிர்ணயிப்பது உள்பட, மாநில அரசின் பல்வேறு அதிகாரங்கள் தேசிய மின் தொகுப்பு விநியோக மையத்துக்கே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதனால்  இந்த புதிய மசோதாவுக்கு தமிழ்நாடு உள்பட எதிர்க்கட்சிகள்  கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

புதிய மின்சார மசோதாவில் உள்ள ஷரத்துக்கள் என்னென்ன?

மின்கட்டணங்களை குறைக்கும் வகையில் மாநில அரசுகள் வழங்கும் மானியங்களை தவிர்த்தே கட்டணம் நிர்ணயிக்க வழிவகுக்கிறது.

மானியம் இல்லாமல் மின் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும்.

மாநில அரசுகள் வழங்கும் மானியத்துக்கான பணம் சம்பந்தபட்ட நுகர்வோருக்கு நேரடியாக வழங்க சட்டம் வழிவகுக்கிறது. இதன் மூலம் தமிழக அரசின் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் சிக்கல் ஏற்படலாம்.

மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்குத் தலைவர், உறுப்பினர்களைக் கூட மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தேர்வுக் குழுவே தேர்வு செய்யும். அந்த தேர்வுகுழுவில் மொத்தம் 5 பேர் இருப்பர். அதில், மாநிலங்களின் தலைமை செயலாளர்களில் இருவர் இடம்பெறமுடியும். அவர்களது பதவிக்காலம் ஓராண்டாகும்.

அதேபோல, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு அது மத்திய அரசின் கீழ் செயல்படும்.  உற்பத்தி நிறுவனம், விநியோக நிறுவனம், டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களுக்கு இடையில் போடப்படும் ஒப்பந்தங்களை இந்த ஆணையம் செயல்படுத்தும். (மாநில அரசின் அதிகாரம் பறிப்பு)

பொதுமக்கள் மின்சார சட்ட விதிகளை பின்பற்றாவிட்டாலும், ஆணைகளை செயல்படுத்த தவறினாலும் அபராதங்களை உயர்த்தவும் இந்த சட்டம் வழிவகுக்கும்.

மின்விநியோகம் இனி தனியாரிடம் தரப்படும். நுகர்வோர் தங்களுக்கு தேவையான நிறுவனம் மூலம் மின்சாரம் பெறலாம்.

அதுபோல ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க அந்த மாநிலத்தின் அனுமதி தேவையில்லை. (மாநில அரசின் அதிகாரம் பறிப்பு)

மாணியத்தை கணக்கில் கொள்ளாமல், கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசியலமைப்பு சட்டப்படி  மின் நுகர்வு மீதான வரி, மின் விற்பனை மீதான வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலில் (Entry 54) உள்ளது. ஆனால், புதிய சட்டத்திருத்த மசோதாவின்படி, மாநிலத்திற்கு என்றே வழங்கப்பட்டுள்ள தனி அதிகாரம் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்படும்.

இதனால் தேசிய மின்வாரியமே மின்கட்டணங்களை தீர்மானிக்கும். மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுகிறது.

இதனிடையே இந்த புதிய சட்டதிருத்த மசோதா தொடர்பாக எரிசக்தித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஆர்.கே.சிங்,  மின்சாரத்திற்கு மானியம் வழங்கு வதற்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை.

மாநில அரசுகள் அவர்கள் கொடுக்க விரும்பும் அளவிற்கு மானியம் கொடுக்கலாம். அதேவேளையில், இந்த மானிய உதவியை நேரடிப் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் தான் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மின்வாரியங்கள் நல்ல நிலையில் செயல்படுவதோடு, மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) மற்றும் மின்விநியோகக் கம்பி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை முறையாகப் பராமரித்து, மேம்படுத்த முடிவதோடு, கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்திற்கான தொகையை செலுத்த முடியும். மக்களுக்குத் தரமான மின்சாரத்தை வழங்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சட்டத்திருத்ததுக்கு தமிழ்நாடு,  மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.