இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகளில் தேசிய கொடி பறக்க விட வேண்டும் என்று ‘ஹர் கர் திரங்கா’ (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணம்) பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடியை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக குஜராத்தில் உள்ள பல்வேறு ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து 30,000 க்கும் மேற்பட்ட தேசிய கொடிகள் தெற்கு கர்நாடக மண்டல தபால் துறை மூலம் பெறப்பட்டது.

வழக்கமான கதர் துணியாலான கொடிகள் தவிர பாலியஸ்டர் துணியாலான தேசிய கொடிகள் அதிகளவில் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஆயிரக்கணக்கான கொடிகள் குறைபாடுடன் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தேசிய கொடியில் மூன்று வர்ணங்களும் சம விகிதத்தில் இல்லை மற்றும் கொடியின் அளவும் 3:2 என்ற விகிதத்தில் இல்லை, தவிர அசோக சக்கரம் சரியான இடத்தில் அச்சிடப்படவில்லை.

கடந்த 2 நாட்களாக மங்களூர் மண்டலத்திற்கு உட்பட்ட புத்தூர், கொக்கடா, மடந்தையார், பெல்தங்கடி, சூரத்கல் ஆகிய பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களில் மக்கள் மொத்தமாக வாங்கிச் செல்லும் நிலையில் ஒவ்வொன்றையும் சரிபார்க்க முடியாமல் ஊழியர்கள் திணறி வருகின்றனர்.

இது குறித்து மங்களூரு மண்டல தபால் துறை கண்காணிப்பாளர் கூறுகையில், குஜராத்தில் இருந்து முதலில் வந்த பார்சல்களில் குறைபாடு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வார இறுதியில் பெருமளவு விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது புதிதாக 20,000 தேசிய கொடிகள் வந்துள்ளது இதில் எந்த குறைபாடும் இல்லை என்று நம்பிக்கை தெரிவித்தார்.