சென்னை: உரிய ஆதாரங்களை காட்டி ரூ.50,000க்கும் மேல் பணத்தை எடுத்து செல்லலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

50,000 ரூபாய்க்கு அதிகமாக பணம் வைத்திருந்தால் ஆவணங்கள் காண்பிக்க வேண்டும் என்றும் சந்தேகத்திற்கு இடமான பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, தேர்தல் நடத்தை விதிகளில், ரூ15 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதிக்க கோரி கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, உரிய ஆதாரங்களை காட்டி ரூ.50,000க்கும் மேல் பணத்தை எடுத்து செல்லலாம் என்று உத்தரவிட்டனர். மேலும் அவ்வாறு ஆதாரங்களை காட்டாவிட்டால் பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.