சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை-அறிவியல் கல்லூரியில் முதுநிலை படிப்புக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது.

தமிழக அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான முதுநிலைப்படிப்பு சேர்க்கை இன்று முதல் தொடங்குவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு முழுவதும் உள்ள 109 அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. 87,000 இடங்களில் 75,000 இடங்கள் நிரம்பிய நிலையில் தொடர்ந்து மாணவர் சேர்க்கையானது நேரடியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை தொடங்க உள்ளது. நாளை தொடங்கி அக்டோபர் 20ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரிகளில் முதுநிலை கலை, அறிவியல், வணிகம் உள்ளிட்ட படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க பொதுப் பிரிவு மாணவர்களுக்கு ரூ.60, பட்டியலினத்தவர்களுக்கு ரூ.2 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் www.tngasapg.in மற்றும் www.tngasapg.org இணையதளங்களில் மாணவர்கள் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் 044-22351014, 044-22351015, 044-28276791 என்ற எண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அழைத்து வழிகாட்டுதல்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார்.