சென்னை

விளையாட்டு சங்கத்துக்கு நிதி உதவி வழங்கினால் நிர்வாகி ஆக முடியுமா எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வட்டு எறிதல் வீராங்கனை நித்யா ஒரு பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு மனுவில் தேசிய அளவிலான தடகள போட்டியில் மாநில தடகள விளையாட்டு சங்கம் தன்னை அனுமதிக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.  இன்று இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி வழக்கு விசாரணையின் போது, ”தகுதியற்ற வீரர்கள் தேர்வு செய்யப்பட்டால் சம்மந்தப்பட்ட விளையாட்டு சங்கத்தை 2 ஆண்டுகள் தடை செய்ய வேண்டும். அரசிடம் ஒவ்வொரு விளையாட்டு சங்கமும் அரசிடம் பதிவு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும்.

அரசிடம் உறுப்பினர்கள், வீரர்கள், சங்கங்களின் நிதிநிலை விவரங்களை வழங்குவதைக் கட்டாயமாக்க வேண்டும். தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதியான வீரர்களை அனுப்பாதது குறித்துப் புகாரளிக்க தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும்.

நிதி உதவி அளித்தவர் சங்க நிர்வாகி ஆக முடியுமா?  விளையாட்டு சங்கங்களின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் அவசியம் விளையாட்டு வீரர்களாக இருக்க வேண்டும். இந்த விளையாட்டுப் போட்டிகளுக்குச் செலவிடப்படும் தொகை ஆன்லைனில் வெளியிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.