சென்னை

முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தமது இல்லத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த  அதிமுக ஆட்சியில் பதவி வகித்த அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு புகார்கள் எழுப்பப்பட்டு சோதனைகள் நடந்து வருகின்றான்.   ஏற்கனவே  முன்னாள் அமைச்ச்ர்கள் எம் ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி, கே சி வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது.  இன்று அதிகாலை முன்னாள் சுகாதார அமைச்சர் சி விஜயபாஸ்கர் இல்லம் உள்ளிட்ட 43 இடங்களில்  லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை இட்டுள்ளனர்.

இந்த சோதனையில் ரூ.23,85,700 பணமும், 4,870 கிராம் தங்க நகைகளும், 136 கனரக வாகனங்களின் பதிவுச் சான்றுகள் & சொத்து பரிவர்த்தனை ஆவணங்கள் கண்டறியப்பட்டு, வழக்கிற்குத் தொடர்புடைய ரூ.23,82,700 பணம், 19 ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் சி விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம், “நான் வருமானவரி சோதனையைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்.  சோதனையில் எனது வீட்டில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை.  நான் பொது வாழ்க்கையில் இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்து வருகிறேன்.

எனக்கு மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் எனக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. எங்கள் கட்சியான அதிமுகவிற்குச் சோதனை என்பது புதிதல்ல. நான்  இதனைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்.   பொது வாழ்க்கையில் பயணிக்கும் நபர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் நடைபெறுவது சகஜம் தான். இதைச் சந்திக்கத் தயாராக உள்ளேன்” என விளக்கம் அளித்துள்ளார்.