சென்னை

மிழகத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் மாற்றுத் திறனாளிகள் அணுக அடுத்த ஆண்டுக்குள் வசதி செய்யப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கற்பகம் என்னும் வழக்கறிஞர் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.  அதில் அனைத்து அரசுக் கட்டிடங்களிலும் மாற்றும் திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகள் அமைக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிக்கை விடுத்திருந்தார்.  இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

வழக்கு விசாரணையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர், ” தமிழகம் முழுவது உள்ள 49,500 அரசு கட்டிடங்களில் 26,769 கட்டிடங்களில் நுழைவு வாயில்களில் சாய் தளம் மற்றும் கைப்பிடி அமைக்கப்பட்டுள்ளது. 21,063 கட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகள் செல்லக்கூடிய வகையில் வாகன வசதிகள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், 1029 கட்டிடங்களில் பிரெய்லி முறையில் லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் 54 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2017ல் கொண்டுவருவதற்கு முன்புள்ள 45 சதவீத கட்டிடங்களைப் பொறுத்தவரை மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வண்ணம் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனையின் படி 2022 ஜூன் 15ம் தேதிக்குள் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அடுத்த ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் அணுக முடியாத அளவிற்கு எந்த கட்டிடங்களும் இருக்காது என்று தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வசதிகளை அடுத்த ஆண்டிற்கு ஏற்படுத்தவேண்டும். தவறினால் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிவரும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.