நாமக்கல்: தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது என அமைச்சர் சிவசங்கர் உறுதி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சொத்து வரி, கழிவுநீர், குடிநீர் வரி, மின்சார கட்டணம், வாகன பதிவு கட்டணம், வாகன அபராத கட்டணம்   உள்பட பல கட்டணங்களை உயர்த்தி உள்ளது. இது தமிழக மக்களுக்கு அரசுமீத கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், பேருந்து கட்டணமும் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நாமக்கல்லில் நடைபெற்ற மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் சிவசங்கர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தமிழக முதலமைச்சர் ஏற்கனவே சட்டசபையில் அறிவித்தபடி 1,000 புதிய பஸ்கள் வாங்குவதற்கு ரூ.420 கோடி ஒதுக்கினார். அதற்கு  தற்போது அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்று முதலமைச்சர் பஸ் கட்டணம் உயர்வு கிடையாது என ஏற்கனவே அறிவித்திருக்கிறார் என்றவர், மினி பஸ் உரிமையாளர்கள், முதலமைச்சரை சந்தித்து, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர். அதுகுறித்து அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி இருக்கிறோம். விரைவில் அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று கூறினார்.