மண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சர்வர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், நகர் பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இன்று காலை 6.30 மணிக்கு தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், முதல் தளத்தில் உள்ள சர்வர்கள் பெரிய அளவில் சேதமடைந்துள்ளது.

சர்வர்கள் சேதமடைந்துள்ளதன் காரணமாக சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல் நெட்வர்க் கொண்ட செல்போன், லேண்ட்லைன் மற்றும் இணையதள சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், சர்வர் பிரச்சனை இன்று மாலைக்குள் சீரடையும் என்றும், துரிதமாக செயல்பட்டு பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் பி.எஸ்.என்.எல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.