தின்பண்டம் என நினைத்து வெடிகுண்டைத் தின்ற சிறுவன்..

திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலத்தைச் சேர்ந்த தீபக் என்ற  சிறுவன் அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.

வனப்பகுதியில் புல் அறுக்கச்சென்ற தனது பாட்டிக்கு உணவு கொடுப்பதற்காக மாணவன் தீபக் சென்றுள்ளான்.

வழியில் நெய் வாசனையுடன் ஏதோ ஒரு பொருள்  காட்டுப்பாதையில் கிடந்துள்ளது.

தின்பண்டம் என நினைத்து,  சிறுவன் தீபக் அந்த பொருளை வாய்க்குள் போட்டு மென்றபோது, பெரும் சத்தத்துடன் அந்த பொருள் வெடித்துள்ளது.

இதனால் அந்த சிறுவன் அலறி துடிக்க, தகவல் அறிந்த ஊர்க்காரர்கள் அவனைச் செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவனது வாய், கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

காட்டில் உலவும் பன்றிகளைப் பிடிக்க வேட்டைக்காரர்கள், நாட்டு வெடிகுண்டில் நெய்யைத் தடவி வைப்பது வழக்கம்.

அந்த வெடிகுண்டை , தின்பண்டம் என நினைத்து தீபக் தின்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வழக்குப்பதிவு செய்துள்ள செங்கம் போலீசார், குண்டு வைத்த ஆசாமிகளைத் தேடி வருகிறார்கள்.

-பா.பாரதி.