திருவள்ளூர்,

சொந்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய பாஜக பிரமுகர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். சொத்து பிரச்சினையை திசைதிருப்ப அவர் இந்த செயலில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு பரமானந்தம் தனது மனைவி, குழந்தைகளுடன் வீட்டில் உள்ள ஹாலில் தூங்கிக் கொண்டு இருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் முன்பக்கத்தில் இருந்த ஜன்னல்  கண்ணாடியை உடைத்து அதன் வழியாக மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டை வீட்டிற்குள் வீசினார். அதன் காரணமாக, வீட்டினுள் இருந்த மெத்தை தீப்பிடித்து எரிந்தது.

அதைத்தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை பிடிக்க முயற்சி செய்ததாகவும், ஆனால், மெயின்ரோட்டில் தயாராக இருந்த அவரது கூட்டாளியுடன் பைக்கில் ஏறி தப்பிவிட்டதாகவும் புகார் கூறியிருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சொத்துப் பிரச்சினையை திசை திருப்ப தாமே தமது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் திருவள்ளூர் மாவட்ட பாஜகவில் எஸ்சி.எஸ்.டி. பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகிக்கிறார். மேலும் ரியல் எஸ்டேட் மற்றும்  மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப்பொருட்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.