ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவனான சுர்ஜித்தின் உடல் சடலமாக மீட்கப்பட்டு, தற்போது மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை, கடந்த நான்கு நாட்களாக மீட்கும் பணி நடைபெற்று வந்தது. தொடர்ந்து மீட்பு பணிகளில் பின்னடைவு, கருவிகளில் ஏற்பட்ட பழுது காரணமாக 80 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடைபெற்று வந்தது.

சரியாக 2.15 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சுர்ஜித் இறந்துவிட்டதாகவும், அதிக அளவில் அழுகிய நிலையில் அவனின் உடல் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், உடலை தேசிய மீட்பு படையினரும், தனியார் மீட்பு படையினரும் இணைந்து மேலே எடுத்து வருவார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது சுர்ஜித்தின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட உடல் அழுகிய நிலையில் இருப்பதால், தார்பாய் வைத்து மூடப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.