சிதம்பரம்

சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிராகக் கருப்புக் கொடி ஏந்தி  போராட்டம் நடத்தி உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (மே.23) மதியம் சாலை மார்க்கமாகக் கடலூர் வழியாகச் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தங்கிச் செல்வதற்காக வருகை தர இருந்தார்.  , ஆளுநர் கடலூர் நகருக்குள் வரும்போதே சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் துரை தலைமையில் மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் மணிவாசகம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேகர், மாவட்ட துணை செயலாளர் குளோப், வட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் தமிழக ஆளுநர் வருகையின்போது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் சிதம்பரம்  நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சட்ட விரோதமாகக் குழந்தை திருமணம் செய்வதை ஆளுநர் நியாயப்படுத்திப் பேசுவதாகக் கூறி அவர்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்    போராட்டத்தின் போது ஆளுநரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்ளிட்ட 26 பேரை ஏஎஸ்பி ரகுபதி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.

இன்று  மதியம் கடலூரில் இருந்து சாலை மார்க்கமாக வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கினார். பின்னர் மதியம் சுமார் 4 மணியளவில் சீர்காழிக்குப் புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் வருகையையொட்டி சிதம்பரம் வண்டிகேட் பகுதி, நகரின் முக்கிய பகுதி, அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை பகுதி ஆகிய இடங்களில் காவலர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.