போபால்

இன்று பாஜக தனது மத்தியப் பிரதேச மாநில தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

வரும் 17 ஆம் தேதி அன்று மத்திய பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் மக்களிடையே பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஓட்டு சேகரித்து வருகின்றன.

மத்திய ரதேச மாநில ஆளுங்கட்சியான பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா ஆகியோர் வெளியிட்டனர்.

அந்த வாக்குறுதியில் பல்வேறு வாக்குறுதிகள் மற்றும் செயல்திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும், கோதுமை ஒரு குவிண்டால் ரூ.2,700க்கும், நெல் ரூ.3,100க்கும் கொள்முதல் செய்யப்படும், எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும், லட்லி பெஹ்னா யோஜனா மற்றும் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு ரூ.450க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும், மத்தியப் பிரதேச தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மத்தியப் பிரதேச மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவற்றைக் கட்ட உள்ளது என வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.