பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியின் இறுதி நாட்கள் எண்ணப்படுகின்றன என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்து உள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், மக்களுக்கு செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளை தலா ரூ.900-க்கு விற்பனை செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வரும் செப்டம்பரில் 3வது அலை தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன. கர்நாடக மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தப்படுவதில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியதாவது,

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மந்தகதியில் நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் மத்திய-மாநில அரசுகள் முழுமையாக தோல்வி அடைந்துவிட்டன. இத்தகைய நெருக்கடியான நேரத்திலும் மக்களை ஏமாற்றும் பொருட்டு, தடுப்பூசிகளை தலா ரூ.900-க்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

இதனால் மக்களை காக்கும் பணியில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக இறங்கி உள்ளது. மக்களின் உயிர்களை காக்க எங்கள் கட்சி தலைவர்கள் சக்தியை மீறி பணியாற்றி வருகிறார்கள். அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போட,  நாங்கள் ரூ.100 கோடியில் திட்டம் தீட்டியுள்ளோம். எங்களது திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கினால் அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடுவோம் என்றார். எங்கள் கட்சி தலைவர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்க சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்கிறார்கள்.

தற்போதைய நிலையில்,  கொரோனா முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு  உணவு தானிய தொகுப்புகளையும் வழங்கி வருகிறோம். மாநில முதல்வர் உள்பட அமைச்சசர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி வருகின்றனர். இங்கு பா.ஜனதா ஆட்சியின் இறுதி நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.

இவ்வாறு கூறினார்.