பழனி: பா.ஜ.க. ஊராட்சி மன்றத் தலைவி முறைகேடு செய்தது தெரிய வந்த நிலையில்,அவரை அதிரடியாக தகுதி நீக்கம் செய்த பழனி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பழனி அடுத்த  புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத்தின் தலைவியாக பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த செல்வராணி இருந்து வந்தார். இந்த ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன.  இந்தநிலையில் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு இடையே பிரச்சினை இருப்பதாகவும், இதனால் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முறையாக பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார் வந்தது. மேலும், இவர், ஊராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்தி வந்தாக கூறப்படுகிறது.  இதனை தொடர்ந்து  செல்வராணி காசோலையில் கையொப்பமிட்டு ஊராட்சி பணத்தை எடுக்கும் அதிகாரத்தை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர்.  மேலும் ஊராட்சித் தலைவி செல்வராணியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவரை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக கருத்துகேட்பு கூட்டம் நடத்த வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வார்டு உறுப்பினர்கள் இடையே கருத்துகேட்பு கூட்டம் கடந்த வாரம்  நடைபெற்றது. இதற்கு பழனி தாசில்தார் சசிக்குமார் தலைமை தாங்கினார்.

அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள், வார்டு கவுன்சிலர்களிடம் தனித்தனியாக கருத்துகேட்டு பதிவு செய்தனர். இதற்கிடையே கூட்டம் நடந்தபோது, பழனி ஆர். டி. ஓ. சிவக்குமார் நேரில் வந்து பார்வையிட்டார். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், புஷ்பத்தூர் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவி தொடர்பாக வார்டு உறுப்பினர்களின் கருத்து பற்றிய அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பேரில் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றனர்.

இதற்கிடையே கூட்டம் தொடர்பாக ஊராட்சி தலைவர் செல்வராணி தரப்பில் கூறுகையில், ஊராட்சியில் பெரும்பான்மை வார்டு உறுப்பினர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. எனவே நல்ல முடிவு கிடைக்கும் என்றனர். இந்த கூட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வகையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில்,   ஊராட்சி மன்றத் தலைவி செல்வராணியை தகுதி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான ஆணையை செல்வராணி பெற மறுத்த நிலையில் அவரது வீட்டின் முன்பு ஒட்டிவிட்டு அதிகாரிகள் சென்றனர். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.