சென்னை: ‘வாயில் வெட்டுவேன்’ என வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்த விசிக பிரமுகர் தில்லை நடராஜன்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜகவைச் சேர்ந்த  நாராயணன் திருப்பதி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புகாரின் பேரில் விசிக பிரமுகர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக இருப்பவர் நாராயணன் திருப்பதி. இவர் திமுக, வி.சி.க. உள்பட எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் கடுமையாக வாதங்களை மேற்கொள்வார். இவரது பேச்சு அதிகாரத் தோணையில், அதிக சத்தத்துடனும் காணப்படும்.

இந்த நிலையில், வி.சி.க-வைச் சேர்ந்த தில்லை நடராஜன் என்பவர், தன்னை குறிப்பிட்டு வீடு புகுந்து வாயில் வெட்டுவேன் என கொலை மிரட்டல் விடுத்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாகவும், அந்த நபரைக் கண்டறிந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி நாராயணன் திருப்பதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியளார்களை சந்தித்தவர்,  தி.மு.க மற்றும் வி.சி.க கட்சியைச் சேர்ந்த பலர் நாட்டின் பிரதமர் குறித்தும், பா.ஜ.க கட்சி மற்றும் நிர்வாகிகள் குறித்தும் தரம் தாழ்ந்த பதிவுகளை டிவிட்டர் மற்றும் முகநூல் போன்ற சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.ஆனால், இதுகுறித்து புகார்கள் கொடுத்தும், அதன்மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஒருதலைப்பட்சமாக காவல்துறை செயல்படுகிறது.

மேலும், வி.சி.க பிரமுகர் தில்லை கருணாகரன் என்ற நபர், டிவிட்டர் பக்கத்தில் கொலை மிரட்டல் விடுக்கும் ரீதியில் “வீடு புகுந்து வாயில் வெட்டுவேன்” என பதிவிட்டூளளார். அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாஜக பிரமுகரை வெட்டுவேன் என விசிக பிரமுகர் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக காவல்துறை விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.