திருப்பூர்: தமிழ்நாட்டின் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி இருக்கும்போது, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்,  சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என பாஜக கட்சி அலுவலக கல்வெட்டில் போட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழகம் வந்துள்ள நிலையில், திருப்பூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அதைத்தொடர்ந்து,   திருப்பூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர்,  ஈரோடு‌,  ஆகிய மாவட்டங் களில் உள்ள பாஜக மாவட்ட கட்சி அலுவலகங்களைக் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக திருப்பத்தூர் பாஜக அலுவலகம் திறக்கப்பட்டு, அதுதொடர்பாக வைக்கப்பட உள்ள கல்வெட்டு ஒன்றில், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என பொறிக்கப்பட்டு உள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சியாக அதிமுக இருந்து வருகிறது. அக்கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே தற்போது சட்டமன்ற  எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து வருகிறார். அப்படி இருக்கும்போது, 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கல்வெட்டில் பதிவு செய்துள்ளது சட்ட விரோதமானது, கண்டிக்கத்தக்கது என்று அரசியல் கட்சியின ரும், சமூக ஆர்வலர்களும் விமர்சித்து வருகின்றனர்.

ஒரு மாநிலத்துக்கு ஒரு சட்டமன்றம் மட்டுமே இருக்கும் நிலையில், ஒரே ஒரு எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே உண்டு. அப்படி இருக்கும்போது, நயினார் நாகேந்திரன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என போட்டிருப்பது, எதிர்பாராத நிகழ்வா அல்லது எடுபிடியாக உள்ள  எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு தகுதியற்றவர் என நினைத்து, நயினார் தன்னை எதிர்க்கட்சி தலைவர் என பறைசாற்றிக் கொண்டாரா என்பது தெரிய வில்லை.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புக்கும், தமிழ்நாடு சட்டமன்ற பாஜக கட்சித் தலைவர் பொறுப்புக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல், நயினார் நாகேந்திரன் எதிர்க்கட்சி தலைவர் என கல்வெட்டில் போடப்பட்டிருப்பதாக தெரிகிறது. அரசியல் சட்டங்களை உருவாக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு சட்டப்பேரவைக்கு இரு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருக்க முடியாது என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.  புரிய வேண்டியவர்கள் புரிந்துகொண்டால் சரி.