ஹூப்ளி

பாஜகவினர் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தியின் பாதயாத்திரையை கண்டு கலக்கம் அடைந்துள்ளதாக சோனியா காந்தி கூறி உள்ளார்.

வரும் 10ஆம் தேதி அன்று கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா முதல் முறையாக ஹுப்ளியில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.   அவர் தனது உரையில், “சிலர் நாட்டு மக்களிடையே வெறுப்பை விதைப்பதையே வேலையாக கொண்டுள்ளனர். ராகுல் காந்தி அவர்களுக்கு எதிராகவே பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். இவ்வாறு வெறுப்பை விதைப்பவர்களால் கர்நாடகாவுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது.

மக்களிடையே ராகுலின் பாத யாத்திரைக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதைக் கண்டு பாஜகவினர் கலக்கம் அடைந்துள்ளனர். கர்நாடகாவில் பாஜக அரசு செய்த ஊழல், முறைகேடு, சட்டவிரோதம் குறித்து காங்கிரஸ் எழுப்பும் எந்தக் கேள்விக்கும் பாஜகவினர் பதில் அளிக்க மாட்டார்கள். அவர்கள் ஜனநாயக மதிப்பீடுகள் தங்களின் சட்டைப் பையில் இருப்பதாக நினைக்கிறார்கள்.

கர்நாடகா பாஜக அரசின் ஊழல், வெறுப்பு கலாச்சாரம், மோசடி ஆகியவற்றிலிருந்து விடுபட்டால் மட்டுமே முன்னேற முடியும். தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தால் பிரதமர் மோடியின் ஆசி கர்நாடகாவுக்குக் கிடைக்காது என வெளிப்படையாக மிரட்டல் விடுக்கிறார்கள்.  இத்தகைய மிரட்டலுக்குக் க‌ர்நாடக மக்கள் சரியான பதிலை அளிப்பார்கள்.  மிரட்டலுக்கு அஞ்சும் அளவுக்கு மக்கள் அவ்வளவு கோழைகள் அல்ல என்பதை பாஜகவினருக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.