டில்லி

காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்குத் தயாராக இருக்கும்படி மாநில பாஜகவை கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில சட்டப்பேரவை தேர்தல் பல முறை தள்ளிப்போடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுடன் காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் நடக்கலாம் என பலரும் எதிர்பார்த்த நேரத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவில்லை. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி காஷ்மீர் மாநில மக்களும் தேர்தலை எதிர் நோக்கி உள்ளனர்.

நேற்று காஷ்மீர் மாநில பாஜக பிரதிநிதிகள் கூட்டம் டில்லியில் நடந்தது. இதில் பாஜக செயல் தலைவர் ஜே பி நட்டா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்த கூட்ட முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக காஷ்மீர் பகுதி தலைவர் ரவீந்திர ரைனா, “தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை  தேர்தலை நடத்த பாதுகாப்பு காரணங்களைக் காட்டி மறுத்துள்ளது. அத்துடன் பாதுகாப்புப் படைகள் தற்போது அமர்நாத் யாத்திரை குழுப் பணியில் மும்முரமாகௌள்னர்.

பாஜகவைப் பொறுத்தவரை தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். இந்த கூட்டத்தில் வாக்குச் சாவடி மட்ட பணி மற்றும் பிரசாரம் குறித்து விவாதித்தோம். தலைமை எங்களிடம் காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்குத் தயாராக இருக்குமாறு தெரிவித்தது. முந்தைய ஆட்சியின் போது நடந்த ஊழல் குறித்து பிரசாரத்தில் பேச வேண்டும் எனக் கட்சித்தலைமை அறிவுறுத்தியுள்ளது” எனத்  தெரிவித்துள்ளார்.