காஞ்சிபுரம்:
தொழில் போட்டியில் கொலை மிரட்டல் விடுத்த பாஜ.க பிரமுகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரை அடுத்த பால்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் திருப்பெரும்புதூர் வல்லம் வடகால் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு கட்டுமான பொருட்கள் சப்ளை செய்ய குணா என்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் பணி ஆணை பெற்று வேலைகளை துவங்கியுள்ளார்.

இந்நிலையில், பால்நல்லூர் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க-வின் திருப்பெரும்புதூர் ஒன்றிய துணைத்தலைவர் மணிமாறன் மற்றும் அரவிந்த், ஜெகநாதன் மூவரும் ஆனந்தை வழிமறித்து தாக்கி, இந்த வேலைகளை தங்களுக்கு தரவில்லை என்றால் அடித்துக் கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் உயிர் பயத்தில் ஆனந்த் திருப்பெரும்புதூர் காவல் நிலையத்தில் மூவர் மீதும் புகார் அளித்ததன் அடிப்படையில் திருப்பெரும்புதூர் டி.எஸ்.பி மணிகண்டன் மேற்பார்வையில் காவல்துறையினர் பா.ஜ.க பிரமுகர் மணிமாறன் மற்றும் அரவிந்த் இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் உண்மையை இருவரும் ஒப்புக்கொண்டதால் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மற்றொருவரான ஜெகநாதன் தலைமறைவாகி விட்டதால் காவல்துறையினர் அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். பா.ஜ.க நிர்வாகி, கொலை மிரட்டல் புகாரில் கைதாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.