சென்னை:

ஆட்சியை காப்பாற்றுவதற்குத்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக, அதிமுக எம்பி அன்வர் ராஜா  பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பாஜக கூட்டணி அமைப்பதற்கு முன்பே, அதிமுக எம்பி அன்வர்ராஜா பாஜகவுக்கு எதிரான கருத்துகளை கூறிவந்தார். முத்தலாக் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை கடுமையாக எதிர்த்து மக்களவையில் பேசினார்.

தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் நடவடிக்கைகளை விமர்சித்து வருகிறார்.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைந்த நிலையில், அதிமுக எம்பி அன்வர் ராஜா தெரிவித்துள்ள கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் கூறும்போது, தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் நேர லாப-நஷ்ட கணக்குதான். ஆட்சியை தக்க வைப்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்று அதிரடியாக கூறியுள்ளார்.

இதுவரை எதிர்கட்சிகள் மட்டுமே தெரிவித்து வந்த இந்த கருத்தை, முதல்முறையாக அதிமுக எம்பி ஒருவர் கூறியிருப்பது அதிமுக மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.