மதுரை: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ்வரும் 1480 பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர் விடுதிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு விரைவில் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் அத்துறை இயக்குனர் காமராஜ்.

அவர் கூறியதாவது, “இத்துறையில் 1480 விடுதிகளில் சுமார் 85000 பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் தங்கி படிக்கின்றனர். 1000க்கும் மேற்பட்ட சமையலர், வாட்ச்மேன் பணியிடங்கள் காலியாக உள்ளன.

திருவண்ணாமலை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இப்பணியிடங்களை நிரப்ப பிப்ரவரி 11, 12, 13ம் தேதிகளில் நேர்காணல் நடக்கிறது. இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுமூப்பு விவரம் கேட்கப்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களில் ஏப்ரலுக்குள் காலியிடங்கள் நிரப்பப்படும். 300 காப்பாளர் பணியிடங்கள் டி.ஆர்.பி., மூலம் நிரப்பப்படவுள்ளன. மாணவர் வருகை, விடுதிக் காப்பாளர்களை கண்காணிக்க பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தப்படவுள்ளது.

மொத்தம் 600 மாணவியர் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. அனைத்து விடுதிகளிலும் மாணவர்களுக்கு, இரும்பு கட்டில் வசதி ஏற்படுத்தப்படவுள்ளன.

மலைப் பகுதியில் மரக்கட்டில் வழங்கப்படும். மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்க ஒவ்வொரு ஆண்டும் 100 மாணவருக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது” என்றார்.