சென்னை:

ரூ.25 கோடியில் நாமக்கல்லில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பயோ எரிவாயு ஆலை, முதல்வர் எடப்பாடி  இன்று தொடங்கி வைத்தார்.

நாமக்கல்லில் ரூ.25 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கம்ரஸ்டு உயிர் எரிவாயு (Bio Gas) ஆலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று  சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது,

நாமக்கல்லில் கம்பரஸ்டு உயிர் எரிவாயு ஆலையை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சார்பில் நாமக்கல்லில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கம்பரஸ்டு உயிர் எரிவாயு (compressed Bio Gas) உற்பத்திப் பணிகளுக்கான யந்திரத்தையும், நாமக்கல், சேலம், புதுச்சத்திரம் மற்றும் ராசிபுரம் ஆகிய இடங்களில் 5 சிபிஜி சில்லறை விற்பனை நிலையங்களையும் துவக்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

ஜெர்மனி கூட்டுடன்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் ஜெர்மனி நாட்டின் ஆயில் டாக்கிங் நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சி நிறுவனமான ஐஓடி உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி சேவைகள் நிறுவனம், நாமக்கல்லில் 34 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு 2.4 மெகா வாட் திறன் கொண்ட பயோ கேஸ் உற்பத்தி செய்து வருகிறது.

இந்நிறுவனம் தயாரிக்கும் பயோ கேசிலிருந்து கம்பரஸ்டு உயிர் எரிவாயு தயாரிக்கும் வகையில் புதிய தொழிற்சாலைக்கு 25 கோடி ரூபாய் செலவில் யந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்புதிய தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 15 டன் கம்பரஸ்டு உயிர் எரிவாயு மற்றும் 20 டன் உயிர் உரங்கள் தயாரிக்கப்படும்.

தமிழ்நாட்டில் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் நிறுவுதிறன் 15 ஆயிரத்து 876 மெகாவாட் ஆகும். இதில், நீர்மின் நிலைய நிறுவுதிறன் 2 ஆயிரத்து 322 மெகாவாட் ஆகவும், காற்றாலை மின் நிறுவுதிறன் 8 ஆயிரத்து 523 மெகாவாட் ஆகவும், சூரிய ஒளி மின்சக்தி நிறுவுதிறன் 4 ஆயிரத்து 54 மெகாவாட் ஆகவும், தாவரக்கழிவு மின் நிறுவுதிறன் 266 மெகாவாட் மற்றும் இணைமின் உற்பத்தி மின் நிறுவுதிறன் 711 மெகாவாட் ஆகும்.

தமிழ்நாட்டில் எரிவாயு சுழலி மின்நிலையங்களின் மொத்த நிறுவுதிறன் 1,013 மெகாவாட். இதில் மாநிலத்திற்கு 516 மெகாவாட்டும், தனியாருக்கு 497 மெகாவாட்டும் சொந்தமானதாகும்.

சென்னையில் அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, இரண்டு கூட்டு சுழற்சி முறையிலான எரிவாயு சுழலி மின் திட்டத்தினை சென்னையை சுற்றியுள்ள பகுதியில் தமிழ்நாடு அரசால் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், ஒரு முதன்மை பொதுதுறை நிறுவனம். இந்த நிறுவனம் கம்பரஸ்டு உயிர் எரிவாயு ஆலையை நாமக்கலில் நிறுவியுள்ளது.

இந்த முயற்சியை முன்னெடுப்பதில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தந்த ஆதரவுக்கு நன்றி.

தமிழ்நாட்டில் மேலும் இதுபோன்ற திட்டங்கள் வரவேண்டும் என்று விரும்புகிறேன். மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.