டெல்லி: 7 ஜாதிகளைச் சேர்த்து,  தேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் வகையில் புதிய சட்ட மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்றுடன் முடிவடைந்தது. கடைசி நாள் அமர்வான இன்று , தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 சாதிகளை ஒன்றிணைத்து,  தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரில் அழைக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவை மத்திய அரசு மக்களைவையில்  இன்று தாக்கல் செய்து நிறைவேற்றியது.

முன்னதாக,  இது தொடர்பாக  தமிழகஅரசு  கடந்த 04.03.2019  அன்று மூத்த ஆட்சிப் பணி அலுவலர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழு அமைத்து அறிக்கை கோரியிருந்தது.  அந்த குழு இது தொடர்பாக,  பல்வேறு தரப்பினருடைய கோரிக்கைகள் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக மானுடவியல் அறிக்கைகளை கருத்தில் கொண்டு மாநிலப் பட்டியலினத்தில் உள்ள வாதிரியான் உட்பிரிவினையும் உள்ளடக்கி தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி ஆகிய 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட பரிந்துரைத்தது. மேலும், தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட்டாலும் மேற்குறிப்பிட்ட தற்போது 7 சாதி உட்பிரிவிலும் சமூகப் பொருளாதார நிலைகளைக் கருத்தில் கொண்டு பட்டியலின வகுப்பில் தொடரும் என்று இக்குழு பரிந்துறைத்தது.

இதன் அடிப்படையில், 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை இனி தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட மத்திய அரசுக்கு தமிழக அரசு அரசு பரிந்துரைத்திருந்தது.

அதைத்தொடர்ந்து, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 7 பட்டியலின உட்பிரிவை சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்றழைக்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில்  ‘இன்று தாக்கல் செய்யப்பட்டு,  செய்து நிறைவேற்றி உள்ளது. தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வில்,  இந்த மசோதா மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். பின்னர்  குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றபின் சட்டம் அமல்படுத்தப்படும்.

இந்த சட்ட திருத்தம், தமிழகத்திற்கு  மட்டுமே  பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.