பீகார் மாநிலம் சப்ரா மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் கள்ளச்சாராயம் அருந்தி 60 பேர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு மீது எதிர்க்கட்சியான பாஜக குற்றாம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2016 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்து வரும் நிலையில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருவதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

சப்ரா மாவட்டத்தில் புதனன்று நடைபெற்ற கள்ளச்சாராய மரணங்கள் பீகாரில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் மஷ்ரக் காவல் நிலைய தலைமை அதிகாரியும் ஒரு காவலரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பீகார் கள்ளச்சாராய சம்பவம் குறித்து பாரதிய ஜனதா கட்சி மாநிலங்கள் அவையில் நேற்று குரலெழுப்பினர் இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டதை அடுத்து மூன்று முறை அவை ஒத்திவைக்கப்பட்டது.