சென்னை: இளைஞானி இளையராஜா மகளும்,  பாடகருமான பவதாரிணி மறைவுக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  ரசிகர்களின் மனதில் தனியிடம்”  பிடித்தவர்  பவதாரிணி என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் குறிப்பிட்டு உள்ளது.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி உடல்நலமின்றி நேற்று (ஜனவரி 25ந்தேதி)  காலமானார். புற்றுநோய் பாதிப்பு காரணமாக  இலங்கையில் சில காலமாகசிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 புற்றுநோய்க்காக ஆயூர்வேத சிகிச்சை பெற இலங்கை சென்றதாகக் கூறப்படுகிறது. நாளை சென்னைக்கு விமானம் மூலம் அவரது உடல் கொண்டுவரப்பட உள்ளது. பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பவதாரிணியின் இறப்புக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணியின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி, தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர் ஆவார். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது. பாரதி திரைப்படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றவர். இசையமைப்பாளராகவும் பல படங்களுக்குப் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணி அவர்களின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும். தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானிக்கும், பவதாரணியின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தந்தை இளையராஜா, சகோதரர்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா ஆகியோரது இசையமைப்பில் பாடல்களை பாடியுள்ளார்.
இளையராஜா இசையமைத்த ராசய்யா என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். இவரது குரலில் பல பாடல்கள் ஹிட் அடித்திருந்தாலும் பாரதி படத்தில் வரும் மயில்போல பொண்ணு ஒன்னு பாடலும், ராமன் அப்துல்லா படத்தில் இடம் பெற்றுள்ள என் வீட்டு ஜன்னல் வழி ஏன் பாக்குற பாடலும் இவரின் புகழை பட்டித் தொட்டி எங்கும் எடுத்து சென்றது என குறிப்பிட்டுள்ளார்.

 காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமதி. பவதாரிணி அவர்கள் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றவர். சிறந்த பாடகர். அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன். தனது மகளை இழந்து வாடும் சகோதரர் திரு. இளையராஜா அவர்கள் தாங்க முடியாத இந்த துயரத்தில் இருந்து மீள வேண்டிய சக்தியை தர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் பவதாரினி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்